‘விக்கி டோனர்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் ஆயுஷ்மான் குர்ரானா. வித்தியாசமான கதை தேர்வு மற்றும் இயல்பான நடிப்பு ஆகியவற்றின் மூலம் ஏராளமான ரசிகர்களை ஈர்த்தவர். கடந்த ஆண்டு வெளியான ‘அந்தாதுன்’ திரைப்படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது ஆயுஷ்மான் குர்ரானாவுக்கு கிடைத்தது.
இந்நிலையில் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் ஆயுஷ்மான் குர்ரானா கூறியிருப்பதாவது:
என்னுடைய தனித்தன்மை, நம்பிக்கைகள், நம் நாட்டின் மீதான் என்னுடைய பார்வை ஆகியற்றின் நீட்சியே என்னுடைய திரைப்படங்கள். நான் இந்த சமூகத்துக்கு என்னால் முடிந்தவற்றை செய்ய விரும்புகிறேன் என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர் என்று நம்புகிறேன். என்னுடைய சக குடிமக்களின் நம்பிக்கையை எப்போதும் நான் பொய்யாக்க மாட்டேன்.
என்னுடைய திரைவாழ்வின் சிறப்பான காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருப்பதாக எனக்கு தோன்றுகிறது. இந்த பயணம் நீண்ட நாட்களுக்கு தொடர வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த பயணம் மிகவும் நன்றாக இருக்கிறது. ஏனெனில் இப்போது நான் இருக்கும் இந்த இடத்துக்காக நான் எவ்வளவு கடினமாக உழைத்திருக்கிறேன் என்பதை நான் அறிவேன். என் மீதும், நான் நடிக்கும் படங்களின் கதை மீதும் மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதை காணும்போது மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். நான் அவர்களின் ஒருவன், எப்போதும் அவர்களில் ஒருவனாக இருந்து அவர்களின் கதைகளை சினிமா வடிவில் வெளிக்கொண்டு வருவேன்.
இவ்வாறு ஆயுஷ்மான் குர்ரானா கூறியுள்ளார்.